FreeWebSubmission.com TO KNOW MORE.....

Mother Teresa and her Missionary Works

புனித அன்னை தெரசாவின் பிறரன்புச்சேவையும் நற்செய்திப் பணியும்


   நற்செய்தி அறிவிப்பது திருஅவையின் இயல்பான மற்றும் இன்றியமையாதச் செயல். எல்லா வகையான நிலையிலும் எளிய மற்றும் இனிமையான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கின்ற இன்றைய சமுதாயம் ஆன்மீக வாழ்விலும் அருள்வாழ்விலும் வளர்ச்சி காணவும் இயேசுவின் நற்செய்தியை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் புதுமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்றைய தமிழக திருஅவைக்கு அவசியமானது இத்தகைய புதியமுறை நற்செய்தி அறிவிப்பதின் முக்கியத்துவமும் சிறப்புத்தன்மைகளை கற்றுக் கொண்டு செயல்படுவதே. இத்தகைய புதியமுறை நற்செய்தி அறிவிப்பின் வழிமுறைகளை அனைவரும் கற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் தேவையான மனநிலையே. இந்த புதியமுறை நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு புதிய நற்செய்தி அல்ல மாறாக கிறிஸ்தவ வாழ்வில், குடும்ப வாழ்வில் மற்றும் அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்தப்படுகின்ற அன்பும் அக்கறையும் மிகுந்த ஒரு சாட்சிய வாழ்வே நற்செய்தி அறிவிக்க துணைபுரியும். தனிமனித குடும்பங்களும், கிறிஸ்தவக் குடும்பங்களும் உண்மையான மனித அன்பை உணர்ந்துகொண்டும், பகிர்ந்துகொண்டும் வாழ முயல்வதே புதியமுறை நற்செய்தியை அறிவிக்கக்கூடிய வழிமுறையாகும்.

 இத்தகைய புதியமுறை நற்செய்தி அறிவிப்பையும் பிறரன்புச்செயல்களையும் தனது அன்றாட வாழ்வில் வெளிப்படுத்தி வாழ்ந்து வந்த புனித அன்னை தெரசா இன்றைய உலகிற்கு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு. புனித அன்னை தெரசாவின் பிறரன்புச் சேவைகளை ஒரு நற்செய்தி அறிவிப்பு என்று சொல்ல முடியுமா? புனித அன்னை தெரசாவின் நற்செய்தி அறிவிப்பு முறைகளை சரியாக புரிந்துகொண்டால்தான் இதை ஏற்றுக்கொள்ள முடியும். இதற்கு அன்னை தெரசாவின் பிறப்பு, பெற்றோர், படிப்பு மற்றும் துறவற வாழ்வைத் தேர்ந்துகொண்ட நிலை, அவரது பிறரன்புப் பணிகளையும் புரிந்துகொள்ள முயலும்போது தான் அன்னை தெரசாவின் நற்செய்திச் பணியினை அவரது பிறரன்புச் சேவைகள் எடுத்துரைப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.


பிறப்பு மற்றும் பெற்றோர்

       அல்பேனியா மலைப்பாங்கான மற்றும் அழகிய இயற்கை வளம் மிகுந்த நாடு. வடக்கில் ஆல்ப்ஸ் மலை, தெற்கில் பெனின்சுலா, வடக்கிலும் கிழக்கிலும் யூகோஸ்லாவியா என்ற எல்லைகளைக் கொண்டுள்ளது. மக்களின் முக்கியமான தொழில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, பருத்தி போன்றவை. இந்நாடு உலகத்திற்கே மிக நன்றாக தெரிந்தது காரணம் அன்னை தெரசா பிறந்து வளர்ந்த நாடு என்பதே. இத்தகைய சிறப்பு வாய்ந்த அல்பேனியா நாட்டிலுள்ள ஸ்கோப்ஜி என்ற நகரத்தில் நிக்கோலா போதாஜாக்ஸ் மற்றும் த்ரானா என்ற தம்பதியருக்கு கடைகுட்டியாக 1910ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் தேதி ஆக்னஸ் கொன்ஸ்கா போஜாக்ஸியு பிறந்தார். ஆக்னெஸின் தந்தை  ஒரு கட்டிட பணியாளர் தாயார் மிகவும் பக்தியும், பணிவும், கருணையும் மிகுந்தவர்.  ஆக்னெஸ்க்கு ஆஜே என்ற அக்காவும், லாசர் என்ற ஒரு அண்ணணும் இருந்தனர். அன்பான அழகிய சிறிய கிறிஸ்தவ குடும்பம். தங்கள் குழந்தைகள் மூவரையும் பக்தியிலும், ஒழுக்கத்திலும், நற்பண்புகளிலும், ஏழைகள் மீது அக்கறை காட்டுவதிலும் அவர்களின் பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வளர்த்தனர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் ஆக்னெஸின் தாயார் ஏழைகளை அரவணைத்து செல்வதிலும், தங்கள் ஊரில் யாராவது நோயினாலோ, துன்பத்தினாலோ பாதிக்கப்பட்டிருந்தால் தவறாமல் சென்று உதவக்கூடிய நற்பண்பு மிகுந்தவர். இப்படி மற்றவர்களுக்கு உதவிபுரிய செல்லும் போது தனது கடைக்குட்டி ஆக்னெஸையும் பல சமயங்களில் அழைத்து சென்றுள்ளார்கள்.

      அதோடு அவர்களின் இல்லத்தை நாடி உதவிகேட்டு வந்தவர்களை வெறுமையாக அனுப்பாமல் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வோடு உபசரித்ததை பலநாள்கள் இளம் ஆக்னெஸ் கண்டு பூரிப்படைந்துள்ளார். எனவே தான் தனது வாழ்க்கை குறிப்பிலே எனது தாயாரிடத்திலே தான் முதன் முதலாக உண்மையான அன்பை, கருணையை, இரக்கத்தை, ஏழைகள் மீதுள்ள தனி அக்கறையை கண்டு கொள்ள முடிந்தது என குறிப்பிடுகிறார். ஆக்னெஸின் தந்தை மிகவும் பொறுமையும் திறமையும் மிகுந்தவர். குழந்தைகள் மீது தனி அன்பும் அக்கறையும் உள்ளவர். ஆக்னெஸுக்கு ஒன்பது வயது நடக்கும்போதே அவரது தந்தை பல மாதங்களாக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் துன்புற்று இறந்துவிட்டார். தந்தையின் இழப்பு குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்காத வண்ணம் குடும்பத்தின் முழுபொறுப்பையும் ஆக்னெஸின் தாயார்  த்ரானா ஏற்று செயல்படவேண்டிய கட்டாயம்.  குழந்தைகளின் படிப்பு அவர்களின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்ற ஏக்கமும் கலக்கமும் த்ரானாவை பாதிக்க, தன்னையும் தனது குழந்தைகளையும் கடவுளின் கரத்தில் ஒப்படைத்து ஒவ்வொரு நாளையும் ஆசீர்வாதமாக மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனே தனது அன்றாடப் பணிகளை நிறைவேற்ற முனைந்து செயல்பட்டார்.

பள்ளி படிப்பு மற்றும் ஆன்மீகம்
          தனது குழந்தைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்ட த்ரானா அவர்களுக்கு வேண்டிய கல்வி, மறைபோதனை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொண்டு வளர வேண்டுமென்பதில் கருத்தாக இருந்தார். எனவே தனது குழந்தைகளை கிறிஸ்தவ நெறியிலும், மறையறிவிலும் வளர்க்க அருள்சகோதரிளால் நடத்தப்பட்ட பள்ளியைத் தேர்ந்தெடுத்து கல்வியிலும் ஒழுக்கத்திலும் வளர உற்சாகப் படுத்தினார். அதே சமயத்தில் ஆன்ம காரியங்களில் ஈடுபாடு காட்ட வேண்டுமென அக்கறை கொண்டிருந்தார். அதனால்தானோ என்னவோ, ஆக்னஸ் பங்கிலுள்ள பக்தசபை மற்றும் பாடல் குழுவில் சேர்ந்து இறைவனைப் புகழ்வதிலும், பிறர்நலச்சேவையில் ஆர்வம் காட்டிய போதும் அவரது அன்னை மிகுந்த மகிழ்ச்சியும் வரவேற்பும் கொடுத்தார்கள். அதே சமயம் ஏழைகள், அநாதைகள் மற்றும் ஆதரவில்லாதவர்களுக்கு உதவிசெய்யும் வகையில் இளம்பெண்கள் வின்சென்ட் தே பால் சபையின் உறுப்பினராக இணைந்து செயல்பட வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் அதிகமாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்ற பக்தசபைக் கூட்டங்களில் ஆர்வமாக கலந்து கொள்ளவும், அத்தகைய கூட்டங்களில் ஆசியாவிலிருந்தும் மற்ற மறைபரப்பு நாடுகளிருந்தும் பங்குதந்தைக்கு கிடைத்த கடிதங்கள் மற்றும் பத்திரிக்கைளில் வெளிவந்த நற்செய்தி அறிவிப்பு பணிக்கான ஆர்வமிகுந்த பணியாளர்களின் தேவைகளை மையப்படுத்திய கட்டுரைகளை வாசிக்கவும், அதற்கான விளக்கத்தை கேட்டுப் பெறுவதிலும் ஆக்னஸ் அதிக ஆர்வம் காட்டினார். மேலும் இளம் உள்ளங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய அழைக்கப்பட்டபோது தாராளமாக தங்களின் ஒத்துழைப்பைக் கொடுத்தனர். அதில் ஆக்னேஸ் சிறப்பிடம் பெறுகின்றார். காரணம் தனது 12ம் வயதிலேயே ஒரு நற்செய்தி பணியாளராக மாற வேண்டும், இந்தியாவிலுள்ள பெங்கால் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும், சேவை புரியவேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்ததை தனது தாயிடமும், பங்கு தந்தையிடமும் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். மிகக் குறிப்பாக இயேசு சபை துறவியர் செய்துவந்த நற்செய்தி பணியினை தாங்கி வெளிவந்த மாத இதழ் கத்தோலிக்க மி­ன் என்ற புத்தகத்தை தவறாமல் படிக்கவும் அதனுடைய விளக்கத்தை தனது தாயிடமும், பங்குத்தந்தையிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்.

துறவு வாழ்வு
           
     இளம் வயதிலே இறையனுபவத்தால் துண்டப்பெற்று இறைவனுக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முன் வந்த ஆக்னேஸ், தனது தாயிடமும் பங்குத்தந்தையிடமும் தனது விருப்பத்தை தெரிவித்து, அவர்களின் வழிகாட்டுதலை எதிர்பார்த்தார். அத்தகைய வழிகாட்டுதலின்படி செயல்பட தயக்கம் ஏதுமின்றி துறவு வாழ்வை மேற்கொள்ளும் மன உறுதி பெற்றார். எனவே 1928 ம் ஆண்டு லொரேட்டோ சபை சகோதரியாக விருப்பம் கொண்டு இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த டப்னில் என்ற நகரில் உள்ள சபைத்தலைமை சகோதரிக்கு கடிதமும், ஒரு விண்ணப்பப் படிவமும் இணைத்து அனுப்பி வைத்தார். சில நாள்களுக்குள் சபைத்தலைமை அன்னையிடமிருந்து வரவேற்பு கடிதம் வர டப்ளினுக்குச் செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவரது அன்னை மிகுந்த ஆனந்தத்துடன் வரவேற்று அனுப்பி வைத்தார். அங்கே ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேல் தங்கி ஆங்கிலம் மற்றும் துறவற சபைஒழுங்கு பற்றி தெரிந்து கொண்டு, பிறகு இந்தியாவில் மிகவும் குறிப்பிடப்படும் இடங்களில் ஒன்றான வங்கதேசத்திலுள்ள டார்ஜிலிங் என்ற பகுதிக்கு நவதுறவு பயிற்சிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஏறக்குறைய தேவையான தொடக்கநிலை பயிற்சிகள் அனைத்தும் முடித்து 1931 ம் ஆண்டு  ஆக்னஸ் தனது முதல் வார்த்தைப்பாட்டை கொடுத்து லொரேட்டோ சபையின் ஒரு அருள்சகோதரியானார். அப்போது தான் அருள்சகோதரி தெரசா என்று புனித குழந்தை தெரசாவின் வழியில் வாழ தனது பெயரை மாற்றி சபைதலைமைஅன்னையின் வழிகாட்டுதலுடன் துறவற வாழ்வை ஆரம்பித்தார். முதல் வார்த்தைப்பாட்டை கொடுத்த அருள்சகோதரி தெரசாவை லொரேட்டா சபையினர் நடத்தி வந்த கல்கத்தாவிலுள்ள என்டேலி என்ற இடத்திலுள்ள புனித மரியன்னைப் பள்ளியில் ஒரு ஆசிரியையாகப் பணிபுரியும் பொறுப்பேற்றார். இளம் அருள்சகோதரி தெரசா மிகுந்த ஆர்வத்துடன் கல்விப் பணிபுரிதலில் அக்கறை காட்டினார்கள்.

கல்விப்பணி
               ஏறக்குறைய 1937 ம் ஆண்டில் அருள்சகோதரி தெரசா தனது இறுதி வார்த்தைப்பாட்டை கொடுத்து தன்னை  லொரேட்டா சபையின் நிறந்தர உறுப்பினராக அர்ப்பணம் செய்தார். அதன்பிறகு அவர் பணியாற்றி வந்த பள்ளியிலேயே தொடர்ந்து கல்விப் பணியில் ஈடுபட பணித்தனர். மிகுந்த ஆர்வத்துடனும் பொறுமையுடனும் தனது பணியில் விருப்பங்கொண்ட அருள்சகோதரி தெரசா பள்ளி விடுமுறை நாள்களில் அருகாமையிலுள்ள ஏழைகள் வாழும் இடங்களுக்குச் சென்று இயன்ற அளவிற்கு உதவிக்கரம் நீட்டினார்கள். ஏழைகள், அநாதைகள் மற்றும் ஆதரவற்றோரின் நலனில் அக்கறை காட்டி செயல்பட்டார்கள். அந்த சமயங்களில் கல்விப்பணியை விட அதிகமாக ஏழைகளின் நலனில் அக்கறை காட்டுகின்ற செயல்களில் ஈடுபட பல நாள்கள் காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமானது. ஏனென்றால் ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் தான் அருள்சகோதரி தெரசாவால் இத்தகைய பிறரன்புப் பணிகளில் ஈடுபட முடிந்தது. வாரம் முழுவதும் பள்ளியிலும் விடுமுறை நாள்களில் ஏழைகளுக்கு பணிபுரிகின்ற செயல்களிலும் ஆர்வம் காட்டியபோது அவரது உள்ளத்தில் ஏழைகளுக்கு உதவிபுரிய ஒருவாரம் வரை காத்திருக்க வேண்டுமா? நோயினால் துன்புறுவோருக்கு ஆறுதல் தர ஏழு நாள்கள் வரை காத்திருக்க முடியுமா? என்ற பலவிதமான கேள்விகள் அவரது உள்ளத்தைத் துளைத்தன. அதே வேளையில் பள்ளியில் பணிபுரிகின்ற நிலையில் நோயினால் துன்புறுகின்ற ஏழைகளின் தேவைகளில் மருந்து, மாத்திரை வேண்டுமென்று கேட்கிறவர்களுக்கு எந்த விதத்திலும் பண உதவியோ, பொருள் உதவியோ செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் அவரது துறவற வாழ்வைச் சிந்திக்க வைத்தது.

இரயில் பயணம்
    துறவற வாழ்வை மேற்கொள்பவர்கள் கட்டாயம் ஒவ்வொரு ஆண்டும் ஒருவாரம் அல்லது பத்து நாள்கள் தியானம் செய்து இறைஉறவில் நிலைத்து வாழ வாய்ப்புகள் கிடைப்பது உண்டு. அந்த வகையில் 1946 ம் ஆண்டு செப்டம்பர் 10ம் நாள் அருள்சகோதரி தெரசா தனது ஆண்டு தியானத்தில் பங்கேற்பதற்காக டார்ஜிலிங் நோக்கி இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தான் அவரது உள்ளத்தின் ஆழத்தில் இயேசுவின் அழைப்பின் குரலை கேட்க முடிந்தது. அந்தக் குரல் அருள்சகோதரி தெரசாவை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. அழுகின்ற ஏழையின் குரல் இயேசுவின் குரலே என அருள்சகோதரி தெரசா மட்டுமே உணர முடிந்தது. எனவே, தான் செய்து வந்த கல்விப்பணியை விட ஏழைகளுக்கு உதவிபுரிய வேண்டுமென்ற தனது விருப்பத்தையும் இயேசுவின் அழைப்பையும் குறித்து பெல்ஜிய நாட்டைச் சார்ந்த ஆன்மீகத்தந்தை அருள்பணி ஜெலட் வான் எக்சம் என்பவரிடத்திலும் கல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் பேராயராக திகழ்ந்த பிரேயர் பெர்டினான்ட் என்பவரிடத்திலும் எடுத்துச் சொல்லி செயல்பட வழி தேடினார். அவரது ஆன்மீகத்தந்தையும் பேராயரும் அருள்சகோதரியின் எண்ணத்தையும் சிந்தனையையும் முதலில் மாற்றிவிட முயன்றனர் ஆனால் முடியாமல் போகவே வேறுவழி எதுவும் தெரியாத நிலையில், ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேலாக இத்தகைய போராட்டம் அருள்சகோதரியின் உள்ளத்தை உடைக்க இறுதியாக பேராயரின் அனுமதியுடன் லொரேட்டோ சபையிலிருந்து வெளியேறி ஏழைகள் வாழுகின்ற தெருக்களில் வாழ அனுமதி பெற்றார்.  இறுதியாக 1948 ம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் அருள்சகோதரி தெரசாவின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கண்டு அவர் கேட்டுக்கொண்டபடி செயல்பட அனுமதித்தார்.  எனவேதான் 1950ல் மி­னரிஸ் ஆப் சேரிட்டி என்ற சபையை ஆரம்பித்து அதன் வழியாக ஏழைகளைப் பற்றிய சிந்தனையிலும் அவர்களுக்கு செய்ய வேண்டிய சேவை பற்றிய அக்கறையிலும் ஆர்வம் காட்டினார் அருள்சகோதரி தெரசா. இப்படி பல்வேறு சேவைகள் வழியாக தன்னையே ஈடுபடுத்திக் கொண்டு துறவற வாழ்வில் மகிழ்வோடு செயல்பட முனைந்தார்.

பெங்காலி தெரசா
       அருள்சகோதரி தெரசா மிகத்துணிவுடன் 1928 முதல் 1948 வரை ஏறக்குறைய 20 ஆண்டுகள் தான் இருந்த சபையை விட்டு வெளியில் வந்து ஏழையோடு ஒரு ஏழையாக தன்னையே அடையாளப்படுத்தி ஆர்வம் குறையாத நிலையில் செயல்பட முனைந்தார். லொரேட்டா சகோதரியாகவே ஏழைகள் வாழும் தெருக்களில் தங்கி செயல்பட முடியாத நிலையை உணர்ந்த அருள்சகோதரி தனது பாதுகாப்பு, தான் செய்துவந்த கல்விப்பணி அனைத்தையும் விட்டுவிட்டு, பெங்கால் பகுதியில் தெருக்களை சுத்தம் செய்யும் ஒரு வேளைக்கார பெண் அணிந்துள்ள வெள்ளை நிற கதர் ஆடையை தனது ஆடையாகக் கொண்டு ஏழைகளுக்குப் பணிசெய்கின்ற ஒரு பணியாளாக தனது பணியைத் தொடங்கினார். இதற்கு தேவையான மருத்துவ பயிற்சியை பாட்னாவிலுள்ள மெடிக்கல் மி­ன் மருத்துவ பணிபுரியும் அருள்சகோதரிகளிடம் பெற்று கொல்கத்தாவிலுள்ள ஏழைகள் அதிகமாக வாழும் தெருக்களில் வாழ முடிவெடுத்த சகோதரி தெரசா தான் வைத்திருந்து வெறும் ஐந்து ருபாயோடு ஏழைகளுக்கு உதவிபுரிய முன்வந்தார்கள்.

       தொடக்க காலங்களில் அருள்சகோதரி தெரசாவிற்கு முழுமையான ஒத்துழைப்பை ஏழை மக்கள் கொடுக்காத போதும் மனம் தளராது தெருக்களிலும் சாலை ஓரங்களிலும் கிடந்த முதியோர், வறியோர், அநாதைகள், ஆதரவில்லாதவர்களை அரவணைக்கும் ஒரு தாயாக செயல்பட்டார்கள்.  அத்தோடு  அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த சிறுவர், சிறுமியருக்கு ஒழுக்கத்தையும், நற்பண்புகளைம், மதிப்பு கொடுத்து செயல்படும் மனநிலை, மற்றும் சுத்தமாக இருக்க வேண்டியதன்  அவசியத்தை தெரியப்படுத்தவும் அதன் வழியாக அந்த பகுதியில் வாழ்ந்து வந்த அனைத்து குழந்தைகளும் மிகுந்த மகிழ்வுடன் செயல்பட பல வழிகளில் அறிவுரை கொடுத்து நற்பண்புகளில் வளர ஆதரவாக இருந்தார்கள். இப்படி ஒரு அம்மாவைப் போன்று அன்புடனும் பாசத்துடனும் கவனிப்பும் அக்கறையும் பெற்றக் குழந்தைகள் அவரை அம்மா, அம்மா என்று அழைக்க ஆரம்பித்தனர். இப்படி சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் உணர்ந்த அம்மா தெரசாவை அந்த பகுதியில் வாழ்ந்து வந்த வறியோரும், முதியோரும் அம்மா  தெரசா, அம்மா  தெரசா என அன்பாக அழைக்கலாயினர். மேலும் அனைத்து விதங்களிலும் ஒத்துழைப்பு கொடுக்கவும், அம்மா தெரசாவை ஆதரவில்லாத மக்களின் பாதுகாப்பாக கருதி மதிப்பளித்து செயல்படவும் ஆரம்பித்தனர்.

அன்னை தெரசா
               கல்கத்தா பகுதியில் வாழ்ந்து வந்த அனைத்து ஏழை மக்களையும் எந்தவித வேறுபாடுமின்றி நடத்தவும் மிகக் குறிப்பாக ஏழைகளுக்காக எல்லாவித உதவிகளைச் செய்வதிலும் ஆர்வம் காட்டினார் அன்னை தெரசா.  பல்வேறு நிலைகளில் மக்களின் தேவைகளை உணர்ந்த அன்னை தெரசா சமுதாயத்தில் உள்ள ஏழைகள் நோயினால் பாதிக்கப்பட்டபோதும், இறக்கும்போதும் அவர்களை கவனிக்கவோ, ஆதரவு காட்டவோ யாருமே இல்லாத  ஒரு சூழ்நிலையை கண்ணோக்கி  அவர்களை கவனிப்பதில் அக்கறை காட்டினார்கள். அந்த சமயத்தில் மக்களையும், ஏழைகளையும் பாதித்த ஒரு நோய் என்னவென்றால் அன்பு இல்லாமையே என்று அன்னை தெரசா நன்கு உணர்ந்திருந்தார். காரணம் அன்பின்றி பல குழந்தைகள், முதியோர், அநாதைகள் இறந்ததை அன்னை தெரசாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அன்னை தெரசா ஏழைகள், அநாதைகள் மற்றும் ஆதரவில்லாதவர்கள் கடவுளின் அன்பை, அரவணைப்பை பெற வேண்டுமென்பதில் கவனம் செலுத்தினார்கள். அதுவே அவர்களின் முதன்மையான பணியாகவும் இருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. உலகில் பிறந்து வாழ்ந்து வரும் ஒவ்வொரு நபரும் இறைவனது படைப்பு. அப்படியயனில் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களிடமிருந்து அன்பை, அரவணைப்பை, பாசத்தை, நேசத்தை பெற துடிப்பதே மனிதனின் மாண்பு என்பதை அன்னை தெரசா உணர்ந்து, ஏழைகள் இறைவனின் இரக்கத்தை, மன்னிப்பை சுவைத்து மகிழ தங்களது வாழ்வை முழுவதையும் ஏழைகளின் நலன்களுக்காக அர்ப்பணித்தார்கள். கடவுள் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை. ஏழைகள் மீது கொண்டுள்ள உண்மையான அன்னை தெரசா வெளிப்படுத்தி அனைத்து வகையான சேவைகளையும் இறைவனின் மகிமைக்காகவே செய்தார்கள். அன்னை தெரசா தன்னையே முழுவதுமாக இறைவனின் கரத்தில் ஒப்படைத்து இறைமகிமையைக் காண ஒவ்வொருநாளும் ஆர்வம் கொண்டு செயல்பட்டார்கள். காரணம் எளிமை, துVய்மை, தாழ்ச்சி போன்ற நற்பண்புகளில் வளர்ச்சியும் மாற்றமும் கண்டு செயல்பட துணிந்த ஒரு நிலைதான். எனவே தான் அன்னை தெரசாவும் எந்தவித வேறுபாடுமின்றி ஏழைகளுக்கு உதவிபுரிவதில் ஆர்வத்துடன் செயல்பட முடிந்தது.

பிறரன்புச் சேவைகள்

     அன்னை தெரசா தனது வாழ்வு முழுவதையும் ஏழை எளியவரின் நலனில் அக்கறை காட்டுவதையே நம்பி செயல்பட்டார்கள். அன்னை தெரசாவால் உருவாக்கப்பட்ட துறவற சபையில் உறுப்பினராக சேர்ந்து பணியாற்ற விரும்புவோர் ஏழ்மை, கற்பு, கீழ்படிதல் ஆகிய வார்த்தைப்பாடுகளுடன் இணைந்து நான்காவது வார்த்தைப்பாடான முழு உள்ளத்தோடு ஏழை எளியவருக்கு இலவசமாகப் பணிபுரியக் கூடிய அர்ப்பணத்தை வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய அர்ப்பணம் இயேசுவின் மீது கொண்டுள்ள அன்பை, பிறரன்புச் செயல்கள் மூலம் வெளிப்படுத்தும் ஆற்றலை உள்ளடக்கியது. எனவேதான் அன்னை தெரசாவின் பிறரன்புச் சேவையை ஒரு சமூகப் பணி என சொல்லுவதை விட ஒரு ஆன்மீகப் பணி அல்லது துறவறப் பணி எனக் குறிப்பிடுவது சிறந்தது. துறவறப் பணி என்பது நற்செய்தி அறிவிப்பு எனலாம். காரணம் எப்படிபட்ட ஒரு நபராக இருந்தாலும் சமூகப்பணி செய்யலாம் ஆனால் அர்ப்பண வாழ்வு மற்றும் துறவற வாழ்வில் இயேசுவின் அன்பை முன்னிலைப்படுத்தி முழுமையாக தனிநபருடைய வாழ்வை அர்பணமாக்கும் வாழ்வுதான் துறவற வாழ்வு. இத்தகைய துறவற வாழ்வு இயேசுவின் மீதுள்ள உண்மையான அன்பை வாழ்ந்து காட்டுவதை மையப்படுத்தியது. அதே சமயத்தில் இயேசுவுக்கு அருகாமையில் செல்ல வேண்டுமெனில் ஒவ்வொரு நபரும் அன்றாட வாழ்வில் ஏழைகளுக்கு அருகாமையில் செல்லும் போது தான் இயேசுவுக்கு அருகாமையில் செல்ல முடியும் என்பதை தனது சேவைகள் மூலம் அன்னை தெரசா எடுத்துரைத்தார்கள்.அன்னை தெரசாவின் அனைத்து பிறரன்புப் பணிகளும் இயேசுவுக்கு செய்கின்ற பணி என்பதை எண்பித்துக் காட்டினார்கள். ஆண்டவர் இயேசுவையே மையப்படுத்தி வாழ்ந்தார்கள். எனவே தான் அன்னை தெரசா செய்த அனைத்து பிறரன்புப் பணிகளையும் ஒரு நற்செய்தி அறிவிப்புப் பணி என்று சொன்னால் மிகையாகாது.

    இத்தகைய பிறரன்புப் பணிகளை செய்வதற்கு தேவையான ஆற்றலை இயேசுவிடமிருந்தே பெற்றுக்கொண்டார்கள். இதை இறைவார்த்தையின் பின்னனியில் சின்னஞ்சிறிய என் சகோதர சகோதரிகளுக்கு செய்ததையயல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25.40), நான் தாகமாயிருக்கிறேன் (19.28) என்பதை இயேசுவின் அழைப்பாக உணர்ந்து செயல்பட்டார்கள். துன்பப்படுகின்ற ஒவ்வொரு நபரிலும் அன்னை தெரசாவால் மட்டுமே அது இயேசுவின் குரல் என்பதை உணர முடிந்தது. இத்தகைய பிறரன்புச் சேவைகளை பல்வேறு வகையில் செயல்படுத்தினார்கள் (1) ஏழைகள் மற்றும் அநாதைகள் இல்லங்கள், (2) கைவிடப்பட்ட குழந்தைகள் காப்பகம், (3) தொழுநோயாளர் இல்லம், (4) முதியோர் இல்லம் என பல இல்லங்களை அரசு உதவியுடனும் பல்வேறு நல் உள்ளங்களில் ஆதரவுடனும் உருவாக்கி அவைகளில் ஏழைகளை, அநாதைகளை, விதவைகளை, கைவிடப்பட்டோரை, முதியோரை, நோயாளிகளை அரவணைக்கும் அன்புக் கரமாக அன்னை தெரசா செயல்பட்டார்கள். இப்படிபட்ட அனைத்து வகையான பிறரன்புப் பணிகளும் ஆண்டவர் இயேசுவின் மீதுள்ள அன்பை உண்மையாக்குகின்ற செயல்களாக வெளிப்படுத்தினார்கள். இப்படிபட்ட இரக்கச் செயல்களில் அன்னை தெரசா ஆர்வத்துடன் இணைந்து செயல்பட்டதை கண்டு ஏறக்குறைய 124 வகையான பரிசுகளை உலகின் பல பகுதிகளிலிருந்தும் அளித்து அன்னையின் பிறரன்புச் செயல்களை கண்டுகொண்டனர் .
               
     பிறரன்புபணியில் ஆர்வத்துடன் செயல்பட்டட அன்னை தெரசா 1997ம் ஆண்டு இறந்தார். அவரது அடக்கக் சடங்கையும் இறுதிச்சடங்கையும் இந்திய அரசு முன்வந்து நிறைவேற்றியது. இன்றும் புனித அன்னை தெரசாவின் மதர்அவுஸ்  உள்ள கல்கத்தாவிற்கு சென்றால் அன்னை தெரசா உள்ளே என்று பொறிக்கப்பட்டுள்ள சாதாரண மரத்தால் செய்யப்பட்ட எளிய சிறிய பலகை இருப்பதைக் காணமுடியும். அன்னை தெரசாவின் அன்புப் பணியை பார்த்து திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் 2003ம் ஆண்டு அருளாளர் நிலைக்கு உயர்த்தினார். எனக்கும் அன்று உரோமை புனித பேதுரு பேராலய வளகத்தில் திருந்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது.  தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் 2015ம் ஆண்டு அன்னை தெரசாவை புனித நிலைக்கு  உயர்த்தினார். காரணம் புனித அன்னை தெரசாவின் அன்புச் சேவைகள் மூலம் உலகின் அனைத்து எல்லைகளுக்கும் ஆண்டவர் இயேசுவின் அன்பை எடுத்துச் செல்லும் உண்மையான கருவியாக அன்னை தெரசா விளங்கினார்கள்.

புனித அன்னை தெரசாவின் நற்செய்தி அறிவிப்பு முறை

       புனித அன்னை தெரசாவின் நற்செய்தி அறிவிப்புப் பணி இன்றைய தமிழக திருஅவையின் அவசியமான பணியாக அமைந்துள்ளதை உணர முயலவேண்டும். புனித அன்னை தெரசாவின் அன்பு வழிகளை பின்பற்றி வேறுபாடுகளையயல்லாம் கடந்து இயேசுவை மட்டுமே மையாமாகக் கொண்டு செயல்படுவதே இன்றைய திருஅவையின் அவசியம். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார் இன்றைய திருஅவைக்கு அவசியமானது மதமாற்றமல்ல மாறாக சொல், செயல், வாழ்வின் மூலம் கவர்ந்திழுக்கின்ற சாட்சிய நிலையை உள்ளடக்கியதுதான் புதியமுறை நற்செய்தி அறிவிப்பின் மையம். இத்தகைய சாட்சியமிகுந்த நற்செய்திப்பணியாற்றிய புனித அன்னை தெரசா கடைபிடித்த முறைகள் தனிநபர் சந்திப்பு, குடும்ப சந்திப்பு, ஏழை எளியவருடன் உடனிப்பு மற்றும் உரையாடல், எளிய வாழ்க்கை முறை, நோயாளருடன் உடனிருத்தல், தேவையிலிருப்போருக்கு உதவுதல், அன்பு மொழி, இதயமும் கரங்களும் இணைந்த செல்பாடு, இயேசுவின் அன்பை, இரக்கத்தை, கருணையை பகிர்ந்து வாழ்தல். இத்தகைய செயல்பாடுகள் மூலம் எல்லாவகையான வேறுபாடுகளையும் தாண்டி அன்னை தெரசாவால் இயேசுவின் அன்பை பகிர்ந்து வாழ முடிந்தது. எனவேதான் அன்னை தெரசா இவ்வுலகில் உயிர் வாழ்ந்த போதே நடமாடும் புனிதையாக அழைக்கப்பட்டார்கள்.

       இத்தகைய பல்வேறு பிறரன்புச் சேவைகள் மூலம் புனித அன்னை தெரசா ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார்கள் என்றால் மிகையாகாது. அனைத்து பிறரன்புப் பணிகளுமே இயேசுவின்மேல் வைத்துள்ள அன்பை உண்மையாக்குகின்ற செயல்களாக அமைந்திருந்தன. அன்னை தெரசாவின் இத்தகைய பிறரன்புச் சேவைகள் மூலம் எத்தகைய மாற்றத்தை மையப்படுத்த விரும்பினார்கள் என்றால் அனைத்து விதங்களிலும் மனிதம் மாண்புற வேண்டும், கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் மாண்புடன் வாழ வேண்டும், துன்புறுகின்ற ஏழை எளியவரில் இயேசுவின் முகத்தைக் காணவேண்டும், மனித சமுதாயத்தில் வேறுபாடுகளை கடந்து மதம், இனம், மொழி என்ற பாகுபாடுகளை கடந்த மனிதர்கள் அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்க முயன்றார்கள். இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் பணி திருஅவையில் திருமுழுக்கு பெற்றுள்ள நம் ஒவ்வொருவரின் கடமை. எனவே நாம் ஒவ்வொருவரும் இன்றைய நவீன உலகில் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கின்ற உண்மையான தூதுவர்களாக செயல்பட புனித அன்னை தெரசா நம் அனைவருக்கும் சிறந்த ஒரு மாதிரி. நமது வாழ்வில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க தேவையானது உண்மையான, எதார்த்தமான மனநிலை. இத்தகைய உண்மையான மனநிலை எல்லா மனிதரையும் அரவணைக்க, அன்பு செய்ய, ஏற்றுக்கொள்ளக் கூடிய, இயேசுவின் அன்பை அறிவிக்க தேவையான துணிவைத் தரக்கூடியது. ஏறக்குறைய 1950ல் கொல்கத்தாவின் பகுதிகளில் சுற்றி வந்த அன்னை தெரசாவுக்கு பல வழிகளில் துன்பங்களும், இன்னல்களும் இருந்தன. அவற்றை வெற்றி கொள்ளக்கூடிய ஆற்றல் தனது செபத்தின் மூலம் இறையனுபத்தின் மூலம் பெற்றுக் கொண்டார்கள். நாம் வாழ்ந்து வருகின்ற நமது குடும்பங்களில், பங்கில், சமுதாயத்தில் எளிய, இனிய, அன்புகலந்த வார்தைகள் நமது உரையாடலில் உறவில் வெளிப்படும் போது மிகக் குறிப்பாக ஏழை, எளியவரை, அநாதைகளை ஆதரவில்லாதவர்களை அரவணைத்து ஆதரவுக் கரம் தருகின்ற போது இயேசுவின் நற்செய்தியை அறிவித்த அன்னை தெரசாவின் வழியில் நாமும் இணைகின்றோம், இயேசுவை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடியவர்களாத் திகழ்கின்றோம். இன்றைய தமிழக திருஅவை சாட்சிய வழிகளில் வளர துணைபுரியக் கூடிய பல்வேறு முறைகளை கற்றுக்கொண்டு இயேசு மையப்படுத்திய செயல்களில் ஆர்வம் காட்ட முயல்வதே இன்றைய நற்செய்தி அறிவிப்பின் அவசியமும் தேவையுமாக  உள்ளது.